தினசரி சமையலையே ஒரு கை பார்த்துவிடும் நம் இல்லத்தரசிகளுக்குப் பண்டிகை
வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? தமிழர்களின் சித்திரைத் திருநாளும் அதைத்
தொடர்ந்து கேரள மக்களின் விஷு வருடப் பிறப்பும் வருகிற நாட்களில்,
சமையலறையும் புதுக்கோலம் பூண்டுவிடும். தமிழகத்தின் பக்குவமும் கேரளத்தின்
கைமணமும் நிறைந்த சில உணவு வகைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சென்னை
டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். புத்தாண்டைப் புதுச் சுவையோடு
சிறப்பிக்கலாம் வாருங்கள் தோழிகளே.
புளி இஞ்சி
என்னென்ன தேவை?
இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
வெல்லம், பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
புளி - 50 கிராம்
நல்லெண்ணெய் - 50 கிராம்
கடுகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
நார் இல்லாத இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். அதைத் தோல் நீக்கி, பொடியாக
நறுக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி,
சூடானதும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய பச்சை
மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் புளிக் கரைசல்,
உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். இஞ்சி நன்றாக வதங்கி,
புளிக் காய்ச்சல் பதம் வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும். ஒரு
வாரம்வரை கெடாது.
No comments:
Post a Comment